அமைதிசூழ்
அடர் காரிருள்.
மெல்லியதாய்
மெழுகின் வெளிச்சம்.
எதிரெதிரே
இவர்கள் இருவரும்.
ஏன்
என்னைக் காதலிக்கிறாய்?
அவள் கேட்டாள்.
காதலிக்க
காரணம் வேண்டுமாயென்ன?
இவன் சொன்னான்.
"இருந்தால்,
நன்றாக இருக்குமே"
என்றாள் அவள்.
"இல்லாவிட்டாலும்,
நன்றாகத்தானே இருக்கிறது!"
என்றான் இவன்.
காரணமின்றி
எதுவும் நிகழ்வதில்லையே!
அவள் சிரித்தாள்.
காரணத்தோடு
காதல் நிகழ்வதில்லையே!
இவன் சிரித்தான்.
நான்தான்
காதலிக்கவில்லையே,
பிறகேன்?
நான்தான்
காதலிக்கிறேனே,
அதுபோதாதா?
இருமுனை
ஈர்ப்புதானே காதல்?
ஆமாம்,
அதில் மறுப்பேது?
நீயென்னை
ஈர்க்கவே இல்லையே?
நீயென்னை
ஈர்க்காமல் இல்லவேயில்லையே!
கடைசிவரை
கடுகளவுக் காதலும்
தரவே மாட்டேன்.
கடலளவு
கவிதை தருகிறாயே
அதுவே போதும்.
உன்னை
திருத்தவே முடியாது.
திருந்துவதற்கு
காதல் பிழையாயென்ன?
(சிறு அமைதி)
அவள்
மெல்லமாய் சிரித்தாள்.
இவன்
கள்ளமாய் பார்த்தான்.
தண்டனையாய்
காதல் சிறையிட்டது.