கொரோனா: தனித்திருக்க வேண்டிய நேரம்

“அரசின் அறிவுரைகளை முறையாகக் கடைப்பிடித்து, வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிற ஒவ்வொரு இந்தியக் குடிமக்களுக்கும், மனித இனத்தின் சார்பாக என் நன்றிகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்“

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வகுத்து வருகிறது. ஆனாலும், நம் மக்கள் கேட்பதாக இல்லை. இன்னமும் வெளியில் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளியே ஏன் வருகிறீர்கள்? என காரணம் கேட்டால், கண்டிப்பாக எல்லோரிடமும் ஒரு காரணம் இருக்கும். அது சரியான காரணமாகவும் இருக்கலாம்; தவறான காரணமாகவும் இருக்கலாம். இப்போது காரணத்தையும் அதற்கான நியாயத்தையும் நிலைநாட்டும் நிலையில் நாம் இல்லை. வெளியில் சுற்றுவதற்கு காரணத்தையும், அதற்கான விளக்கத்தையும் கொடுப்பதை விட்டுவிட்டு அரசாங்கத்தின் அறிவுரைகளை முடிந்தளவு கடைப்பிடிக்க முயலுவதே சரியான செயலாக இருக்கும். சில நேரங்களில் தவிர்க்கமுடியாத காரணங்களால் சிலர் வெளியே வர நேரிடலாம். அதை நம் யாராலும் தவிர்க்கவும் முடியாது. இதில் உண்மை என்னவெனில், தேவைக்காக வெளியில் வருபவர்களைவிட தேவையில்லாமல் வெளியில் சுற்றுகிறவர்களே அதிகம். “என் உடம்புக்கு எதுவும் ஆகாது; வைரம் பாய்ந்த உடம்பு“ என வாயிலேயே வடை சுடுவோருக்கும், மண்டையில் பலவண்ணங்களில் நிறமியைப் பூசிக்கொண்டு வண்டியில் சுற்றும் புள்ளைங்களுக்கும், மனித இனத்தின் சார்பாக சில விளக்கங்களை அளிப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பதிவின் நோக்கம், கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்துவதும், பயமுறுத்துவதும் அல்ல; மாறாக, தேவையில்லாமல் இன்னமும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கொரோனா வைரசின் தீவிரத்தை கொஞ்சமாவது புரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சியே.

ஆல்பர்ட் ஆலென் பேர்ட்லெட் (Albert Allen Bartlett) என்கிற இயற்பியல் விஞ்ஞானி, மக்கள் தொகைப் பெருக்கத்தினை விளக்குவதற்காக, பாக்டீரியாவை வைத்து ஒரு ஆராய்ச்சியை செய்தார். அந்த ஆராய்ச்சியின் பெயர் பேர்ட்லெட் குவளை சோதனை (Bartlett Beaker Experiment). இந்தச் சோதனையின் நோக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் எப்படிக் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதாகும். இந்தச் சோதனையைப் பயன்படுத்தி, கொரோனா வைரசினால் உண்டாகிற தொற்றுநோய், நாளுக்கு நாள் எப்படி மனிதர்களிடையே அதிகளவு பரவுகிறது என்பதைப் பார்ப்போம். சோதனையின் முடிவு கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.


இப்போது, நேரம் சரியாக 11:00 மணி என்று வைத்துக் கொள்வோம். ஒரு கண்ணாடிக் குவளையை (Beaker) எடுத்து, அதனுள் ஒரு கொரோனா வைரஸ் போன்றதொரு நுண்ணுயிரியை போட்டு விடுவோம்.






கடிகாரம் 11:01 மணியை தொடும்போது ஒரு வைரஸ், இரண்டாகி இருக்கும். 11:02-ல் இரண்டு, நான்காகி இருக்கும். 11:03-ல் நான்கு, எட்டாகி இருக்கும். 11:04-ல் எட்டு, பதினாறாகி இருக்கும். 11:05-ல் பதினாறு, முப்பத்திரண்டாகி இருக்கும். இப்படியே இந்த வைரஸ் படிப்படியாக ஒவ்வொருமுறையும் இரண்டு மடங்காகிக் கொண்டே போகும்.






மெல்ல மெல்ல வளர்ந்துக் கொண்டிருந்த இந்த கொரோனா வைரசின் வளர்ச்சி, கடிகாரம் 11:54-ஐ தாண்டும்போது கட்டுக்கடங்காமல் மிகவும் வேகமாக இருக்கும். 11:59 மணியாகும்போது அபரிமிதமான வளர்ச்சியால் குவளையானது வைரஸால் பாதியளவு நிரம்பியிருக்கும். 12:00 மணியை தொடும்போது, ஒரே நிமிடத்தில் குவளை முழுவதுமாக நிரம்பிவிடும். இதில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில், 11:54-ஐ தாண்டும்வரை மெதுவாக இருந்த இந்த வைரசின் வளர்ச்சி, 11:54-ஐ தாண்டியவுடன் கட்டுக்கடங்காமல் மாறிவிட்டது. அதே மாதிரி, முதல் பாதியளவு நிரம்ப 59 நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால், இரண்டாம் பாதி நிரம்ப சரியாக 1 நிமிடம் மட்டுமே தேவைப்பட்டது. நாம் தாமதிக்கிற, அலட்சியப்படுத்துகிற ஒவ்வொரு நிமிடமும், நாம் அழிவை நோக்கி நகர்வதற்கான வேகத்தை அதிகப்படுத்துகிறது. கொரோனா வைரஸின் வளர்ச்சியில் இருந்த வேகத்தைப் போலவே, அது பரவும் வேகமும் இருக்கும். அதற்கான காணொளி விளக்கமும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.


அந்தக் குவளைதான் இந்த உலகம். அதில் போடப்பட்ட ஒரு வைரஸ்தான் ஒரு தனிமனிதன். ஒரு தனிமனிதனின் முன்னெச்சரிக்கை இல்லாத போக்கு, இந்த மொத்த உலகத்தையும் ஆபத்தில் தள்ளிவிடும். நாம் இப்போது 11:54-ஐ தாண்டும் நிலையில் இருக்கிறோம். இப்போதே நாம் சரியான முயற்சிகளில் ஈடுபட்டு, கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தாமல் போனால்... இந்த மனித இனத்தின் பேரழிவை யாராலும் தடுக்கவே முடியாது. வரலாற்றின் பக்கங்கள், “டைனோசர்கள் வாழ்ந்த காலம்“ என தாங்கியிருப்பதைப் போல, “மனிதர்கள் வாழ்ந்த காலம்“ என தாங்கி நிற்கவும் நேரிடும். இது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம். கடிகாரம் 11:54-ஐ தாண்டிவிட்டால், நாம் எல்லோருமே உயிர்ப் பிழைத்திருப்பது கடினம்தான். வைரம் பாய்ந்த உடம்பெல்லாம், வைரஸ் பாய்ந்த உடம்பாகிவிடும்.

ஒரு மாபெரும் காட்டை அழித்துவிட, ஒரு சின்னஞ்சிறிய தீப்பொறியே போதுமல்லவா? இதற்கு, சமீபத்தில் நாள் கணக்கில் எரிந்து சாம்பலான அமேசான் காடுகளே சாட்சி. அந்தச் சிறிய தீப்பொறினால் காடு எப்போதோ தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. தீ மேலும் பரவாமல் தடுப்பதும், தடுக்காமல் போவதும் நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது. காட்டுத் தீயை அணைப்பது கடினம்தான். ஆனால், முடியாதென்று கிடையாது. இதே மாதிரிதான், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது கடினமாக இருந்தாலும், தனித்திருந்து அரசின் ஒவ்வொரு வழிமுறைகளையும் கடைப்பிடித்து முயன்றால் கண்டிப்பாக நம்மால் முடியும்.

இல்லை.. இல்லை... நீ சொல்வது நம்பும்படியாக இல்லை. இதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி.. என்னை பயமுறுத்த நினைக்கிறாய்.. என இந்தப் பதிவுக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பினால், நாம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சந்திக்க நேர்ந்தால் அப்போது விவாதிப்போம். அதுவரை, அரசாங்கத்தின் அறிவுரைகளை முடிந்தளவு கடைப்பிடிக்க முயலுவோம். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதே, நாட்டைப் பாதுகாப்பதாகும்.




Source: 

https://www.worldpopulationbalance.org/understanding-exponential-growth



#StayHome   #StaySafe   #CoronaAwareness   #Tamil

7 கருத்துகள்:

  1. ஹம்.. அருமை👌 அருமையான முயற்சி கொரோனா இரட்டிப்பு நிகழ்வை நிமிடதில் உணர்த்தும் பதிவு...

    பதிலளிநீக்கு
  2. ஆங்கிலத்தில் கவி
    ஆற்றல் மிக்க கவி
    அன்பிற்கோர் கவி
    ஆவலுடன் படித்திட
    தந்திட்ட நயமுடனே கவி
    எம்மை எல்லாம்
    வியப்பில் ஆழ்த்திய
    விந்தை மிகு கவி
    கொரானாவின் உருவாக்த்தை
    அதனின் பரவலை தெரிவித்த மாக்கவி.......
    ��������������������������
    மிக அருமையான கொரானகொரானாவின்
    பரப்பல் உணர்திய கட்டுரை.....��

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9:12 AM, மார்ச் 31, 2020

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:52 PM, ஏப்ரல் 01, 2020

    காரிகை was nice to read.. Waiting for காரிகை upcoming parts..keep going ����

    பதிலளிநீக்கு