தொடர்ந்து ஓடிக்கொண்டே இரு


முயற்சி செய்பவர்கள் எல்லாம் வெல்வதில்லை. தொடர்ந்து முயற்சிப்பவர்களே வெல்கிறார்கள். அதற்கு, நீங்கள் பார்க்கிற ஒவ்வொரு வெற்றியாளர்களுமே சாட்சி. பல நேரங்களில் நாம் தோற்றுப் போவதற்கு காரணம், தொடர்ந்து முயற்சிக்காமல் இடையிலேயே துவண்டு போவதுதான். அந்த நேரங்களில் நமக்கு தூண்டுகோல் கண்டிப்பாக அவசியம். நல்ல உற்சாகமான மனிதர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல உற்சாகமான மனிதர்கள் என்றால், அதில் உங்கள் எதிரிகளும் அடக்கமே. ஆனால், துரோகிகள் அல்ல.

எங்கும், எதற்காகவும் துவண்டு நிற்காதீர்கள். தேங்கி நிற்கிற நீரில்தான் பாசிகள் படிந்து அசுத்தமாகும். ஓடிக்கொண்டிருக்கிற நீரில் ஒரு நாளும் பாசிகள் படிந்ததாய் சரித்திரம் இல்லை. மனதில் கவலைகள் படிந்து அகத்தின் அழகினைக் கெடுக்காமல் இருப்பதற்கு, இலக்கு எனும் கடலை நோக்கி, நதியினைப் போல தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள். மனது என்றைக்கும் தூய்மையாய் உயிர்ப்புடன் இருக்கும். மனம் தூய்மையாய் உயிர்ப்புடன் இருந்தால், தேவையில்லாத கவலையெனும் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளும். வெற்றி தேவதை, விரைவில் உங்களின் வீட்டுக் கதவைத் தட்டுவாள். வாழ்க்கையினை வண்ணக் கரங்களால் அலங்கரித்து அழகாக்குவாள்.

மிகவும் உறுதியான ஒரு கல்லினை சுத்தியல் கொண்டு உடைக்க முயலும்போது, அது முதல் அடியிலேயே உடைந்துப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. உடையும்வரை தொடர்ந்து சுத்தியலால் வலுவாக ஓங்கி அடித்துக் கொண்டே இருங்கள். உங்களின் கடைசி அடியில் அது உடைந்திருக்கும். அது உடைகிற அந்த அடிதான் உங்களின் கடைசி அடியாக இருக்க வேண்டும். 100-வது அடியில் உடைகிறதென்றால், நீங்கள் அடித்த 99 அடிகளும் வீண் என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு அடியிலும் அந்தக் கல்லின் உறுதித் தன்மைக் குறைந்து பலவீனமாகிக் கொண்டே வரும். அது உங்களின் கண்களுக்கு தெரியாமல் போகலாம். அதனால், 99 முறை அடிக்கும்போதும் அந்தக் கல்லில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்று அர்த்தமில்லை. நீங்கள் அடித்த ஒவ்வொரு அடியும் அந்தக் கல்லினை நிலைக்குலையச் செய்யும். அதனால் தொடர்ந்து உத்வேகத்தோடு ஓங்கி அடித்துக் கொண்டே இருங்கள்.

உங்களின் வெற்றிக்காக நீங்கள் அடிக்கிற ஒவ்வொரு அடியிலும், அதன் அருகில் நெருங்கிக் கொண்டிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 100-வது அடியினை ஓங்கி அடிக்கும்போது, வெற்றி உங்களின் கைகளை முத்தமிடும். தென்றல் காற்று, உங்கள் காதருகில் வந்து மகிழ்ச்சியாய் கவிதைப் பேசும். வாழ்க்கை, நீங்கள் எதிர்ப்பார்த்ததைவிட அழகான வசந்தமாகும்.

4 கருத்துகள்:

  1. நரம்புகள் புடைக்கும் நடையில் எனக்குள் இருக்கும் என்னையே தூண்டுகிறது உங்களுடைய வரிகள். தொடரட்டும் உங்களுடைய பயணம்.

    பதிலளிநீக்கு
  2. Superb lines sir 👌👌👌 keep going sir❣️❣️❣️

    பதிலளிநீக்கு