வாழும் காலம் மிகவும் சிறியது. கண்மூடித்தனமாக ஓடுவதை நிறுத்துங்கள்,
நிதானித்து அமருங்கள், உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக ஒரு
நிமிடம் ஆழ்ந்து யோசியுங்கள். நம்முடைய வாழ்க்கையை நாம் நினைத்தது மாதிரிதான்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா, இல்லை அதற்கு சற்றும் தொடர்பில்லாத எதிர்க்கோட்டில்
பயணித்துக் கொண்டிருக்கிறோமா என உங்கள் மனதிடம் கேளுங்கள். எதிர்க்கோட்டில்
பயணிக்கிறீர்களென உங்கள் மனம் சொன்னால், சற்றும் யோசிக்காமல் மீண்டும் முதலில்
இருந்துத் துவங்குங்கள். நீங்கள் எப்படி வாழ நினைத்தீர்களோ, அப்படி ஆனந்தமாய்
வாழத் தொடங்குங்கள். அடுத்த நொடி, நமக்கு எதைத் தருவதற்காக காத்திருக்கிறதோ
யாருக்குமே தெரியாது. சிரிக்கிறவன் அழலாம், அழுகிறவன் சிரிக்கலாம்.
ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் ஆழ்ந்து நோக்குங்கள்.
அதிலிருக்கும் அழகியலை ரசனையோடு கண்களின் வழியாக உங்கள் மனதிற்கு கடத்துங்கள்.
அதன் சுவையை உங்களின் ஆத்மா முழுமையாக உணரட்டும், லயித்து ஆனந்தப்படட்டும். எதையோ
நோக்கி ஓடுகிற வேகத்தில், நம் ரசிக்க மறந்தவைகள் ஏராளம். அதையெல்லாம்
சிறுப்பிள்ளையாகி ரசியுங்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தை முதலில்
தீயிலிட்டு கொளுத்துங்கள். அடுத்தவன் வந்து உங்களுடைய வாழ்க்கையை வாழப் போவதில்லை.
இன்பமோ, துன்பமோ அதை மனதாற ஏற்றுக் கொண்டு, நீங்கள் நினைத்த மாதிரி வாழுங்கள்.
குடைப் பிடித்து நீங்கள் தவறவிட்ட இந்த மழைத்துளிகள் மீண்டும் உங்களை
நனைக்கப் போவதில்லை. மனமாற நனையுங்கள், மனம் மாறவும் நனையுங்கள். இயற்கையின்
முத்தத்தை இன்பத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். பெட்டிக் கடையில் கிடைக்கிற கடலை
மிட்டாயின் சுவையை ரசித்து, ருசிக்க சிறுப்பிள்ளையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ருசித்து லயிக்க வேண்டுமென நினைத்தாலே போதுமானது. ரசனை என்பது ரசாயன மாற்றமாக
உங்களுக்குள் நிகழ ஆரம்பித்துவிட்டால், நீங்கள் பார்க்கிற யாவுமே அழகுதான்.
பார்வையின் கோணம் மாறுகிறபோது, பார்க்கிற காட்சிகளின் அர்த்தமும் மாறுகிறது. மனம்
உணருகிற யாவுமே ரசனை மிகுந்த ஐம்புலன்களின் வழியாக நிகழ்கிறபோது, ஆனந்தத்தின்
எல்லை அளவிட முடியாத அளவுக்கு விரிகிறது. ரசனையே அனைத்திற்கும் அடி நாதம், ஆதி
தாளம். நீங்கள் நீங்களாக வாழ, ரசனையோடு வாழுங்கள்.
Fantastic .. 👏👏
பதிலளிநீக்குWhat a lines..
பதிலளிநீக்கு"குடைப் பிடித்து நீங்கள் தவறவிட்ட இந்த மழைத்துளிகள் மீண்டும் உங்களை நனைக்கப் போவதில்லை. மனமாற நனையுங்கள், மனம் மாறவும் நனையுங்கள். இயற்கையின் முத்தத்தை இன்பத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்"
I felt good. Hats off you bro.
வாழ்க்கையை வாழ அருமையான வரிகள்.....👏👏👏👏
பதிலளிநீக்கு