வியர்வை வாசம்


பூக்களென்றால்
அவ்வளவு பிடித்தம்

காரணமென்று
பெரிதாக எதுவுமில்லை

நிலமெங்கும்
பூக்களின் சிரிப்புதான்

கடவுளின்
ஆகச்சிறந்த படைப்பு
பூக்கள்தான் என்பான்

மகளுக்கும்
தந்தைக்குமான பந்தம்
அவனுக்கும் பூக்களுக்கும்

சமயங்களில்
அவன் பூக்களோடு
ஆனந்தமாய் பேசுவான்

பூக்களும்
தலையசைத்து இவனோடு
மகிழ்ச்சியாய் கொஞ்சும்

சில கூட்டம்
இவனை பித்தனென
கேலியாக சிரிக்கும்

சில கூட்டம்
இவனை அறிஞனென
ஆச்சரியத்தில் பூரிக்கும்

அன்றைக்கும்
அவனும் பூக்களும்
ஏதேதோ பேசினார்கள்

இவ்வளவு
ஆனந்தமானப் பேச்சை
இதுவரை கண்டதில்லை

பேச்சின்
ஏதோவொரு நொடியில்
இதயம் அடங்கியது

மறுநாள்
அவனுக்கு மாலையிட
பூக்களைப் பறித்தார்கள்

அதிலேதோ
ஒருவித வாசம்
புதிதாய் கூடியிருந்தது

அழுகையோடு
பூக்களை முகர்ந்தாள்
அவனின் அழகுமகள்

அத்தனையிலும்
தன் தந்தையின்
வியர்வை வாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக