சில புத்தகங்களை படிக்கும்போது
நம்மையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டும். அந்தக்
கண்ணீருக்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, அந்தக் கதையோடு, எழுத்தோடு நாம்
ஒன்றிவிட்டதன் அடையாளம். இரண்டு, இங்கிருந்தபடியே நம் கண்களின் வழியே அந்த
எழுத்தாளனுக்கு நாம் செலுத்துகிற காணிக்கை. நானும் பல நேரங்களில் பல புத்தகங்கள்
வாசிக்கும்போது என்னையுமறியாமல் மனம் கனத்து அழுதிருக்கிறேன். இந்த மாதிரியான
அழுகையை நான் எப்போதும் மனிதர்களுக்காக அழுததே இல்லை. இனிமேல் அழப்போவதும் இல்லை.
அவ்வளவு எளிதில் அழுகிற ஆளும் நானில்லை. ஆனால், பிடித்த புத்தகங்கள் என்னை ஏதோ
செய்து கண்ணீரை காணிக்கையாக வாங்கிக் கொள்கின்றன. அந்த அழுகையை அடக்கவும் முடிந்ததில்லை.
இதுவரை அடக்க முயன்றதுமில்லை. இனிமேலும் அடக்கப் போவதுமில்லை.
மாதொருபாகன் படிக்கிறபோது அப்படியான
அழுகை எதுவுமே வரவில்லை. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், எனக்கும்
மிகவும் பிடித்திருந்தது. பிடித்திருந்தும் எப்படி அழுகை வராமல் போனது? என என்னை
நானே கேட்டுக் கொண்டேன். மாதொருபாகனைப் படித்து முடித்தபோது நடுநிசியை நெருங்க
இன்னும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மீதமிருந்தன. மாதொருபாகன் எனக்குள் ஏதோவொரு
உணர்வுக் கடத்தலை நிகழ்த்தியிருந்தது. அது என்ன உணர்வென்றும் இன்னும்
புலப்படவில்லை. அந்த உணர்வோடு உறங்கப் போனேன். ஆனால், உறக்கம் என்னோடு உறங்க வரவில்லை.
புரண்டு புரண்டுப் படுத்துப் பார்த்தேன். நடுநடுவே கொஞ்சம் நேரம் தூக்கம்
வந்தாலும் அந்த தூக்கமும் மேலோட்டமாகவே இருந்தது. காலையில்தான் எனக்கு அழுகை வராது
போன காரணமும் விளங்கியது. அது;
“புத்தகங்கள், கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கிக் கொள்வதில்லை;
இப்படியான தூக்கமில்லாத இரவுகளையும் காணிக்கையாக்கிக் கொள்ளும்”
என காலையில் கண்ணாடியில் தெரிந்த என் சிவந்த கண்கள்
உணர்த்தியது. மாதொருபாகன் ஏற்படுத்திய படபடப்பு இன்னும் அடங்கவில்லை. இன்றைய
இரவும் தூக்கம் வருமாயென தெரியவில்லை. வராமல் போனாலும் வருத்தப்பட மாட்டேன்.
அதற்கு மாறாக, மிகுந்த மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் அடைவேன். இப்படியான
தூக்கமில்லாத இரவுகளை அந்த எழுத்தாளனுக்கும், அவனின் எழுத்துக்கும்
காணிக்கையாக்குவதில் சிவந்த கண்களோடு நான் பெரும் கர்வம் கொள்கிறேன். “மாதொருபாகன்” மாதிரியான எழுத்துக்களைப் படிப்பதனால் என் கண்கள்
நிரந்தரமாக தூக்கத்தை தொலைத்து, சிவப்பை சூடிக் கொண்டாலும் பெரும் மகிழ்ச்சியே
அடைவேன். எனக்கு பிடித்தமான ஆகச்சிறந்த எழுத்தாளர்களில், பெருமாள் முருகனும் “மாதொருபாகன்” படைப்பின் மூலமாக சேர்ந்துக் கொண்டார்.
மாதொருபாகனால் பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்
ஏராளம். அதனால், அவர் சந்தித்த உளச் சிக்கல்கள் விவரித்துவிட முடியாதவை. அதை நான்
விவரிக்கவும் விரும்பவில்லை. எழுத்தாளர்கள் இன்னமும் நசுக்கப்படுவது இந்த உலகின்
சாபக்கேடு.
“போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து
போட்ட கயிறு முதுகில் அழுத்தியது. மேலே பார்த்தான். பூவரசங் கிளைகள் வானில்
விரிந்து பரவியிருந்தன.”
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக