எத்தனை மின்னல்
எத்தனையெத்தனை இடி
இதற்கிடையில்
மரணிக்கும் வலியோடு
பிரசவித்ததென்னை இந்த
மேகம்.
தூய்மை குறையாது
சிப்பிக்குள் விழ
வேண்டினேன்;
திசையில்லா நதியாய்
தேசந்தோறுந் திரிய
வேண்டினேன்;
அலைக் கடலில்
ஆனந்தமாய் ஐக்கியாக
வேண்டினேன்;
இன்னு மின்னும்
என்னன்னவோ ஏராளமாய்
கனவுகள்;
எதுவும் நடக்கவில்லை.
காற்று சதி செய்தது;
கடும்பாறை நடுவே
கொண்டுச் சேர்த்தது.
வெளியேற நினைத்தேன்;
விடவில்லை யிந்த விதி
கரையேற நினைத்தேன்;
காலம் செய்தது சதி.
செய்வதறியாது
கலங்கி நின்றேன்;
வெண்தாமரை
வேரூன்றியது ஆழத்தில்.
ஆனந்தப்பட்டேன்;
பூவாகயென்னை
வெளிக்காட்டினேன்.
உலகமென்னை
இரசித்துக்
கொண்டாடுமென நினைத்தேன்;
அதுவும் நடந்தது.
ஆனால்,
முடிவினில் அடியோ
டென்னை
பறித்துக் கொண்டது.
இருந்தும்,
அடுத்தப் பூவை
நீட்டினேன்;
அதையும் பறித்துக்
கொண்டது.
மீண்டுமீண்டும் நீட்டினேன்;
மீண்டுமீண்டும்
பறித்துக் கொண்டது.
இனியும் ஈன்றுக்
கொடுக்க
என்னிடம்
எதுவுமில்லாமல் மலடானேன்;
கொடுத்தாலும் இரசிக்கிற
பாவனையில்
பறிக்கவே
காத்திருந்தது உலகம்.
மறுபடியும்
கலங்கினேன்;
அழுக்கானேன்;
அசுத்தமானேன்.
துர்நாற்றம் வீசியது;
என்மீதெனக்கே வெறுப்பானது.
மாண்டுப் போகவும்
மனமில்லாது
மீட்டெடுக்க
எதிர்நோக்கி காத்திருந்தேன்.
சூரியனதன்
உதவிக்கரங்களை நீட்டியது;
தன்னோடு அணைத்துக்
கொண்டது;
மேகத்திடம் மீண்டும்
சேர்த்தது.
அதே மின்னல்,
அதே இடி,
இதற்கிடையில்
மீண்டும் பிறந்தேன்.
மீண்டும்
அதே கனவுகள்.
மீண்டும்
அதே காற்றின் சதி.
இப்போது
வேறொருப் பாறை.
மீண்டும்
கலங்கி நிற்கிறேன்.