கற்பனையில்
கண்ட வொருத்தியை
கவிதையில் பொருத்தி
கண்மணியென
பெயரிட்டேன்
அவளை
கம்பனில் கொஞ்சமும்
காமனில் கொஞ்சமும்
கலந்து பாடினேன்
உவமையில்
உருவம் கொடுத்து
உலகத்தினழகைக்
குழைத்து
உள்ளத்தால்
சிலையாக்கினேன்
சட்டென
வெட்டிய மின்னலில்
அவளுக்குள் உயிர் பூத்தது;
எனக்குள் காதல்
பூத்தது
அவள்
நெற்றியைக் கண்டேன்;
குங்குமமாய்
சிவந்தேன்
அவள்
கருவிழியைக் கண்டேன்;
காதலில் மயங்கினேன்
அவள்
மூக்குழலிசைக்
கேட்டேன்;
முரடன் மென்மையானேன்
அவள்
காதுமடலைக் கண்டேன்;
கீதத்தில்
பூபாளமானேன்
அவள்
பூவிதழ்களைக்
கண்டேன்;
தேனீயாய் உருவெடுத்தேன்
அவள்
சிரிப்பைக் கண்டேன்;
சிறையிலிட்ட
கைதியானேன்
அவள்
கருங்கூந்தலைக்
கண்டேன்;
காற்றினுள் தென்றலானேன்
அவள்
கழுத்தைக் கண்டேன்;
மஞ்சள் தாலியானேன்
அவள்
நெஞ்சத்தைக் கண்டேன்;
நொடிப்பொழுதில் தஞ்சமானேன்
அவள்
கொடியிடைக் கண்டேன்;
அங்கேயே மரமானேன்
அவள்
காற்பாதங்களைக்
கண்டேன்;
கவிதையென திகைத்தேன்
அவள்
நகங்களை நறுக்கினாள்;
நான் பிறைநிலாவென
பெயரிட்டேன்
அவள்
பூவனத்தில்
புகுந்தாள்;
நான் பூவெதுவென கேட்டேன்
அவள்
பொன்மானைக் கேட்டாள்;
நான் மாரீசனவதாரம்
கேட்டேன்
அவள்
தேனைக் கேட்டாள்;
நான் அவளிதழைக்
கேட்டேன்
அவள்
காதலைக் கேட்டாள்;
நான் கவிதையைத் தந்தேன்
அவள்
என்னுயிரைக்
கேட்டாள்;
நான் அவளையே தந்தேன்
அவள்
சீதையாக உருவெடுத்தாள்;
நான் குழம்பி நின்றேன்
இப்போது
நானென்ன உருவெடுப்பது?
இராமவுருவமா? இராவணவுருவமா?