கண்மணி: மாதவமிக்க மாதவி


கட்டியவன்
காடு சேர்ந்தபின்
வீதி வீதியாய்
வேலைக் கேட்டுத் திரிந்தேன்

என் விதி;
எவனுமே வீதியில்
வேலைத் தரவில்லை

தங்கக் கட்டி முதல்
மண் சட்டி வரை
கையில் கிடைத்தயெல்லாம்
கடைத்தெருவில் விற்றேன்

நாட்கள் நகர்ந்தன;
நான் மட்டுமே மிச்சமிருந்தேன்

பசி வந்தால்
பத்தும் பறந்துப் போகுமாம்;
பத்திலொன்றாய்
நானும் அடித்துச் செல்லப்பட்டேன்

விற்பதற்கு
எதுவுமில்லாத என்னிடம்
என்னையே விலைப்பேசியது உலகம்

முதலில் மறுத்தேன்
மத்தியில் வெறுத்தேன்
முடிவினில் விற்றேன்

எனக்கோ
வயிற்றில் பசி;
அவனுக்கோ
வயிற்றினடியில் பசி

பசியாற்றுதல்
அவ்வளவு பாவமா என்ன?

பசியாற்றியதில்
வயிறு நிறைந்தது;
கூடவே
வயிற்றில் ஏதோ நிறைந்தது

அதில்
பிறந்தவள்தான்
இந்த அழகிய முத்து

கையில்
ஒன்றுமில்லா யெனக்கு
இவள் மட்டுமே சொத்து

இவளையாவது
சாதிக் கறையில்லாமல்
கரையேற்றிவிட வேண்டும்

அன்பைப்போல்
அன்பானவனிடம் மணிமேகலையை
சேர்த்துவிட வேண்டும்

சரி சரி..
கிளம்புகிறேன் நேரமாயிற்று;
அங்கே காமப்பசியில்
காத்திருக்கிறானொரு இராமன்

அவன்
தீயை அணைத்தால்தான்
என்னடுப்பில்
தீ மூளும்

வேண்டாம்..
வேண்டாம்...

கையில்
காசெல்லாம் திணித்து
நீங்களுமென்னை விலைப்பேசாதீர்கள்

முடிந்தால்
உங்கள் கருணைக்
கண்ணீரிலென்னை புனிதமாக்குங்கள்

வருகிறேன்;
நேரமிருந்தால்,
மரணம் நேராமலிருந்தால்
மீண்டும் நாம் சந்திப்போம்.

- அன்பின் கண்மணி


முந்தைய பதிவுகள்