கட்டியவன்
காடு சேர்ந்தபின்
வீதி வீதியாய்
வேலைக் கேட்டுத்
திரிந்தேன்
என் விதி;
எவனுமே வீதியில்
வேலைத் தரவில்லை
தங்கக் கட்டி முதல்
மண் சட்டி வரை
கையில்
கிடைத்தயெல்லாம்
கடைத்தெருவில்
விற்றேன்
நாட்கள் நகர்ந்தன;
நான் மட்டுமே மிச்சமிருந்தேன்
பசி வந்தால்
பத்தும் பறந்துப்
போகுமாம்;
பத்திலொன்றாய்
நானும் அடித்துச்
செல்லப்பட்டேன்
விற்பதற்கு
எதுவுமில்லாத
என்னிடம்
என்னையே
விலைப்பேசியது உலகம்
முதலில் மறுத்தேன்
மத்தியில் வெறுத்தேன்
முடிவினில் விற்றேன்
எனக்கோ
வயிற்றில் பசி;
அவனுக்கோ
வயிற்றினடியில் பசி
பசியாற்றுதல்
அவ்வளவு பாவமா என்ன?
பசியாற்றியதில்
வயிறு நிறைந்தது;
கூடவே
வயிற்றில் ஏதோ
நிறைந்தது
அதில்
பிறந்தவள்தான்
இந்த அழகிய முத்து
கையில்
ஒன்றுமில்லா யெனக்கு
இவள் மட்டுமே சொத்து
இவளையாவது
சாதிக் கறையில்லாமல்
கரையேற்றிவிட வேண்டும்
அன்பைப்போல்
அன்பானவனிடம் மணிமேகலையை
சேர்த்துவிட வேண்டும்
சரி சரி..
கிளம்புகிறேன்
நேரமாயிற்று;
அங்கே காமப்பசியில்
காத்திருக்கிறானொரு
இராமன்
அவன்
தீயை அணைத்தால்தான்
என்னடுப்பில்
தீ மூளும்
வேண்டாம்..
வேண்டாம்...
கையில்
காசெல்லாம் திணித்து
நீங்களுமென்னை
விலைப்பேசாதீர்கள்
முடிந்தால்
உங்கள் கருணைக்
கண்ணீரிலென்னை
புனிதமாக்குங்கள்
வருகிறேன்;
நேரமிருந்தால்,
மரணம்
நேராமலிருந்தால்
மீண்டும் நாம் சந்திப்போம்.
- அன்பின் கண்மணி
முந்தைய பதிவுகள்