நானோ
அன்பின் கண்மணி;
மாதவமிக்க
மங்கையாய் பிறந்தவள்
அந்த வயதில்
மனமெல்லாம் மகிழ்ச்சி
அதனால், புறமெல்லாம் அழகு
பூவைச் சுற்றும்
வண்டுகளைப் போல்
ஏகப்பட்ட யுவன்கள்
என்னைச் சுற்றினார்கள்
எவருக்கும் பிடிபடாமல்
நழுவிக் கொண்டேயிருந்தவள்;
ஏனோ, அவன் வீசிய
தூண்டிலில் மட்டும் மாட்டினேன்
அவன்
பெயரோ அன்பு;
பெயரில்
அத்தனைப் பொருத்தம்
அவனோ
அழகின் உச்சம்
பாசமுள்ள
ஆண்களின் மிச்சம்
புறமோ
மேகத்தில் தோய்த்த தூரிகை
அகமோ
அமுதத்தில் ஊறிய பொற்சரிகை
அகராதியில்,
அன்புக்கு பொருள் தேடினால்
அவனென இருக்கும்;
அவனுக்கு பொருள் தேடினால்
அன்பென இருக்கும்
நன்றாய்
நகர்ந்தது நாட்கள்
நாட்களெல்லாம் நாங்கள்
நாங்களில்லாது நாட்களேயில்லை
ஒரு நாள்
புயல் காற்று வீசியது
காற்றெல்லாம் சாதியின் துர்நாற்றம்
அந்தப் புயல் காற்றால்
ஆளுக்கொரு திசையில் வீசப்பட்டோம்
செய்வதறியாது திக்கற்று நின்றோம்
வெறிகொண்ட
மேம்படா விலங்கினங்கள்
ஏதேதோக் கூடிப் பேசின
அந்நேரம்,
பகலையும் எங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாய்
காரிருள் கவ்வியது
முடிவினில்,
மேம்படா விலங்கினங்கள்
எங்கள் மீது பாய்ந்தன
எங்கள்
உடலை தனித்தனியாய்
இரத்தத்தில் அலங்காரம் செய்தன
இறுதியில்,
அவனுடலை இழுத்துவந்து
என்னுடலோடு இணைத்துப் போட்டன
இப்போது,
குறைந்தபட்ச மகிழ்ச்சி
எங்களுக்குள் எட்டிப் பார்த்தது
அவனும் சிவந்து இருந்தான்;
நானும் சிவந்து இருந்தேன்
இருவரும் சிவப்பில் ஒன்றானோம்
அன்பில்
அடைக்கலமாக எண்ணியவர்கள்;
சாதிவெறியால்
மண்ணில் அடக்கமானோம்
அஃறிணைகளின்
கண்ணில் சுரக்கிற சிவப்பு;
கன்னத்தில் எப்போது சுரக்குமோ..?
தொடர்ச்சி: