நான்தான்
அதே கண்மணி;
அன்பின் கண்மணி
நான்
காரிருளில் புதைக்கப்பட்டேன்;
கதவுகளுக்குப்
பின்னால் அடைக்கப்பட்டேன்
என்னைச்
சுற்றிலும் கடுங்கருமை;
அதுவும்
அவனைத்தான் நினைவூட்டியது
அவனில்லை
அவனருகில் நானில்லை;
அந்த நறுமண நாட்களுமில்லை
சொல்லில்லை
சொல்லாமல் பொருளில்லை;
சூரியனின் உதயம் கிழக்கிலில்லை
போய்விட்டான்
எனைவிட்டு எங்கோ போய்விட்டான்;
காணா தூரம் காணாமல் போய்விட்டான்
எங்குப்போனாலும்
என்னிடம் மறக்காமல் சொல்வாயே;
இன்று மட்டும் எங்கே போனாய்?
நீ
அழைத்தால் நான் வராமலிருப்பேனா?
உயிரழைத்து உடல் மறுக்குமா?
நீ
கதைக் கதையாய் கதைப்பாயே;
அந்தக் காற்றிலுமுன் வாசமில்லையே?
ஐம்புல னிருந்தும்
என்ன புண்ணியம்?
அவனருகில் நானில்லை;
என்னருகில் அவனில்லை
கடவுளாம் கடவுள்
குருட்டுக் கிழவன்
இத்தனை நடக்கிறதே..
எதாவது கண்டுக்கொள்கிறானா?
படைத்துவிட்டால் போதுமா?
பாதுகாப்பதற்கு காசு வேண்டுமா?
விதைத்துவிட்டால் போதுமா?
விளைச்சலாக்க யார் வருவான்?
ஏழைக்கு
என்று உதவியிருக்கிறாய்?
எனக்கு மட்டும்
உதவிடவாப் போகிறாய்?
கண்ணெதிரே நிற்காதே;
கடுங்கோபம் வரும்முன்
காணாமல் ஓடிப்போ
ஜுஜ்ஜிமா..
அழாதடா செல்லம்..
அம்மா இங்கதான் இருக்கேன்ன்...
என்ன
கேட்கிறீர்கள்?
இறந்தவள்
எப்படி மீண்டும்
வந்தாலென்றாக்
கேட்கிறீர்கள்..?
கொஞ்சம்
பொறுத்திருங்கள்;
குழந்தை அழுகிறது
கொஞ்சம்
பசியாற்றிவிட்டு வருகிறேன்.
தொடர்ச்சி:
முந்தைய பதிவு: